Saturday, May 25, 2013

தக்கென பிழைக்கும் எண்ணங்களால் சுயங்கள் உருவாகும் விதம்




ஓய்வுக்காக காத்திருக்கும் வேளையிலும் 
முடிவெடுக்க வேண்டிய தருணங்களிலும் 
இச்சை செயல்களின் முற்பகுதியிலும் 
என்னுள் தோன்றும் ஆயிரமாயிரம் எண்ணங்கள் 
புற்றீசல் போல் வெளிவந்து 
என்னை உள்ளிழுத்துச் செல்லும்

அவை பசிக்காக நானா 
என் பசிக்காக அவைகளா 
என சிந்திக்கும் வேளையில் 
அவைகள் ஓங்கும் சக்தி ஒடுங்கும் சக்தி
என ஈரணியில் பிரிந்து போரிட துவங்க 
வேங்கைகளின் வேட்டைச் சண்டையை 
வேடிக்கை பார்க்கும் குற்றுயிர் மானாய் 
போரை கவனிக்கையில் பல நேரங்களில் 
ஓங்கும் சக்தி ஒடுங்கியும்
ஒடுங்கும் சக்தி ஓங்கியும் செயல்பட
பெரும்பாலும் ஓங்கும் சக்தியின் வீரர்கள் 
சோர்ந்தும் போரிட வலிமையின்றியும் 
எந்நேரத்திலும் போரிலிருந்து பின்வாங்க 
ஆயத்தமாகவும் இருக்கவே 
ஒடுங்கும் சக்தியே பலமுறை வென்று
தன் முடிவை செயல்படுத்தும்

இது போன்ற போர்களின் முடிவுகளே
என் சுயத்தை வரையறை செய்யும் காரணிகளாகி
நாளடைவில் ஓங்கும் சக்தியே சிந்தனையாய்
ஒடுங்கும் சக்தியே செயலாய் மாறி
செயலென்னும் வெந்நீரில் சிந்தனை மீன் நீந்தும்
போர்களும் தக்கென தழைத்தலுமே மாறிலிகளாய்...