Tuesday, July 11, 2017

நீளும் இரவுகள்

கருமை ஆற்றில் மூழ்கி
கண் விழித்துப் பார்க்கையில்
எங்கும் தோன்றும் இருள் வெள்ளத்தில்
சிக்கித் தவிக்கும் சிறு பூச்சி போல

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கருநீல கடலும் வானும்
போட்டி போட்டுக்கொண்டு
விரிந்து செல்லும் ஒரு நேர்க்கோட்டில்

எது முந்திச்செல்கிறது என
கணிக்க முடியாமல் நீளும் இரு
போர்வைகளும் தூரத்தில் ஒன்றாய்
மடிக்கப்படும் பொழுது

மீன்களும் விண்மீன்களும்
இரண்டறக்கலக்கும் தொடுவானத்தின்
மடிப்பின் இடைவெளியில்
அகப்பட்டுக்கொண்டு மூழ்கும்
என் இரவுகள்