Saturday, March 17, 2012

வலி மிகும் வார்த்தைகளும் நீளும் இரவுகளும்

தன்னிச்சையின் கம் சுமந்து 
செறிவுப்பிசகால் வழி தவறிய சில 
வார்த்தைகளை இடைமறித்து 
மிரட்டும் உன் கண்கள் ...

நழுவிய அவ்வார்த்தைகள் தன் 
பிணைப்பிழந்து வெறும் எழுத்துக்களாய் 
உன் காலில் விழுந்து உடையும் தருணம் 
செறிவுடன் வந்த மற்ற 
வார்த்தைக்குழுக்களோ அவைதம் 
பிறவிப்பயன் வேண்டி 
உன் காதருகே வட்டமிட்டு பறைசாற்றும் 
உன் தாக்கத்தால் என்னில் 
அவை முளைத்த வரலாற்றை.

உன் சிந்தனை ஊற்றில் ஏளனத்தீ எள்ளிநகையாட 
செந்தணல் மீனாய் வெந்தன வார்த்தைகள் 

வன் மிருகத்தால் சிதைக்கப்பட்டு 
குற்றுயிராய் புதருக்குள் பாய்ந்து 
தன் உதிரத்தையும் காரிரவையும் 
ஒரு சேர கழித்துக்கொண்டிருக்கும் 
சிறு மானைப்போல் 
உன் நிராகரிப்பால் காயமுற்ற வார்த்தைகள் 
எழுத்து சொட்டச்சொட்ட ஓடி 
ஒளிந்து கொள்ள இடம் தேடி 
என் அறையின் மூலையில் பதுங்கி 
வெளிவிடும் பயங்கலந்த பெருமூச்சிலும் 
மரண ஓலத்திலும் 
கசியும் ரத்த வாடையிலும் 
துவங்குகிறது என் இரவு.