Thursday, February 25, 2016

தட்பமும் வெப்பமும்





ஆற்று நீர் வளைந்து நெளிந்து
தேங்கி தெளிந்து

ஓடுதல் போலும்
வைகறைப்  பனி ஈரம்
உச்சியில் குளிர்ந்து தன்னுள் கலந்து
தரையில் தவழ்வது போலும்
செல்லும்​​ ​இவள்
பாதையில் நேற்றிரவே ஒரு புல்லாய்
முளைத்து தவமிருக்கும் நான்
இவள் பாதம் என்னை
வருடியதும் மயங்கி போனேன்

மல்லி இதழ்கள் சில சேர்ந்து
என் முகத்தில் நடத்திய தாக்குதலில்
மீள முடியாமல் நான் மயங்கிக்கிடக்க 

தீங்கிழைத்து விட்டோமென்று
இவள் கொஞ்சும் புலம்பல் கேட்டு
நான் நிமிர்ந்ததும் 
இனியும் ஆபத்தில்லை என்றவாறு
நிலத்தில் மிதந்து செல்கிறாள்
மயக்கம் விடுத்தும் தெளிவின்றி
அவள் நினைவில் உழன்று கொண்டே
காத்திருக்கிறேன் அவள் மறு வருகைக்கு

நீரில் எறிந்த கல்லாய் மூழ்கிவிட
மண்ணில் புதைத்த கூடாய் சிதைந்துவிட
மரத்தில் அடித்த ஆணியாய் தங்கிவிட

நீரற்ற ஆற்றுப்படுகையில்
இளவேனில் இலையுதிர் கோடை குளிர்
என காலங்கள் கடந்து 
கூழாங்கல்லாய் தவமிருக்க
பின்பொருநாள் பெய்த மழையில்
நீர் ஓடியும் தழுவாமல் சென்ற ஆற்றாமையில்

உன் புறக்கணிப்பால் காய்ந்து போன 
இலைகளைக் கண்டு பரிதாபமாய் சென்ற
​நீ
தன் ஒட்டுமொத்த நினைவுகளையும்
பூமிக்கடியில் கொத்து கொத்தாக நிலக்கடலை போல்
சுமந்திருக்கும் உணர்ச்சிகளை வேரோடு 
பிடுங்கி எரியாமல் சென்றதும்

பட்டாம்பூச்சியின் இறக்கை உரைத்து 
சந்தனம் பூசிக்கொள்ளும் நீ 
அதன் வலி அறிய வாய்ப்பின்றி சென்றதும்
உணரப்பட்ட இன்பமும் விட்டுப்பிரிந்த வலியும்
சுமந்து முடங்கும் தீண்டப்பட்ட ஆமையாய் நான்